வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

ஒரு நேரத்தில் ஒரே வேலை

நாம் செய்யும் எந்தச் செயலும் வெற்றியுடன் அமைவதற்கு ஒழுங்குமுறை கட்டாயம் இருக்க வேண்டும். ஒழுங்கு என்பது நம்மைச் சரியான பாதையில் நடத்திச் செல்லும்.

ஒழுங்கான முறையில் செயலாற்றியவர்கள் வெற்றியின் வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தில் நாமும் உட்கார வேண்டும் அல்லவா!
அப்படியானால் நாம் நிச்சயம் ஒழுங்குமுறையைக் கடைபிடித்தே ஆகவேண்டும். என்னுடைய அறையில் அதாவது மூளையில் பல அலுவல்கள் ஒழுங்காகவும், வரிசையாகவும் தனித்தனியே அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு அலுவலக வேலையை மறந்து மற்றொரு அலுவலைப் பற்றி செயல்பட வேண்டி இருந்தால் முதல் அறையை மூடிவிடுவேன். இப்பொழுது தேவையான அறையைத் திறந்து கொள்வேன்.
இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதில்லை. வீணான சிந்தனைக்கு என மூளையில் இடமே இல்லை. உறங்கச் செல்லும்போது மூளையில் உள்ள எல்லா அறைகளையும் மூடிவிடுவேன்.
உடனே அயர்ந்து தூங்கிவிடுவேன். இப்படி கூறியவர் யார் தெரியுமா?
அவர்தான் பிரான்ஸ் நாட்டின் அதிபதி நெப்போலியன்!
ஆனால், நாம் எப்படி செயல்படுகிறோம்? சாப்பிடும்போது உணவை நன்கு சுவைத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக நம்முடைய வரவு செலவு கணக்கைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
அலுவலக வேலையைச் செய்யும்பொழுது வீட்டுவிவகாரங்களைப் பற்றி நினைத்து மூளையைக் குழப்பிக் கொள்கிறோம்.
ஒரு சமயத்தில் ஒரே செயலைச் செய்து முடிப்பதுதான் பல செயல்களைச் செய்வதற்கான குறுக்கு வழியாகும். ஒழுங்கு என்பது ஒரு பெட்டியில் சாமான்களை அடுக்கி வைப்பதுதான்.
சரியாகச் சாமான்களை அடுக்கி வைப்பது, தாறுமாறாகச் சாமான்களை அடுக்கிவைப்பதைவிட அரைமடங்கு பொருட்களை அதே பெட்டியில் வைக்கமுடியும்.
ஒரே நேரத்தில் ஒரு வேலை என்பது இயற்கையின் சட்டம். நான் சில முக்கிய காரியங்களை செய்ய வேண்டி இருந்தால், அதனை முடிக்கும் வரையில் நான் வேறு ஒன்றையும் பற்றி எண்ணமாட்டேன் என்கிறார் இங்கிலாந்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி டிவிட்.
இப்படி ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற ஒழுங்குச் சட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டு யார் மனம் ஒன்றி வேலையைச் செய்கிறார்களோ
அவர்களே வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்பது உறுதி! அவர்கள் அவசரப்படவும், ஆத்திரப்படவும் மாட்டார்கள். கடிகாரம் போன்று அவர்களுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கும்.
எடுத்துக்காட்டாக, காந்திஜியின் வாழ்க்கையைக் கவனித்தால், அவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் ஆன்மீக ஞானியாகவும் விளங்கினார். இரண்டும் ஒருவரிடத்தில் இருப்பது எளிதானச் செயல் அல்ல! அவருக்கு அளிக்கப்பட்ட நேரம் போலவே, நமக்கும் ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், அவர் அதனை எவ்வாறு பல காரியங்களுக்கு என்று வகுத்துக் கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிறரால் ஏற்பட்ட தாங்க முடியாத அரசியல் சுமைகளைத் தாம் ஒருவரே தனித்துச் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் அவர் பிரார்த்தனைச் செய்வதை நிறுத்தவில்லை.
உலாவச் செல்வதை நிறுத்தவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதினார். அறிக்கைகள் வெளியிட்டார். நண்பர்களையும், நோயாளிகளையும் சந்தித்தார். அரசியல்வாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நூல் நூற்றார்.
அதற்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதை மட்டும் செய்யும்போது குறைவு ஏற்படாது, வாழ்வில் குழப்பமும் தோன்றாது. நேரம் போதவில்லையே என்ற முணுமுணுப்பும் வராது.
மலை போன்ற வேலைகளுக்கு இடையிலும் மற்ற மொழியை கற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கி காந்திஜி செயல்பட்டது ஆச்சரியம் அல்லவா!
ஜார்ஜ்மில்லர் கூறுகிறார், “உன்னுடைய எண்ணங்களை எல்லாம் அழகாக ஒழுங்குபடுத்து. சுமையானது அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருந்தால் அதிகமான சுமைகளைச் சுமக்க முடியாது.
ஆனால் அதை ஒழுங்காகக் கட்டிவைத்தால் அதிகமான சுமையை தூக்கிக்கொண்டு செல்ல முடியும்.
ஒவ்வொரு நாள் காலையிலும், அந்த மணி நேரத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்டு செயலாற்றினால் வாழ்வில் வெற்றியைப் பெற முடியும்.
நம்முடைய நேரத்தை ஒழுங்காக வகுத்துக்கொண்டால் ஒளிக்கதிர் போல பிரகாசமாக இருக்கும்.
திட்டமிட்டு ஒழுங்குடன் செயலாற்றினால் குறுகிய கால எல்லைக்குள் பெரிய செயல்களை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க முடியும்.
ஒரு வேலையைச் செய்யும்பொழுது அதிலேயே மனம் ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது வேறு வேலையைப் பற்றி சிறிதும் எண்ணிப்பார்க்கக் கூடாது.
கால்பந்து விளையாட்டில் கேப்டன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தை அளித்து அவரவர்களுக்குரிய வேலையை வரையறுத்து வைப்பார்.
இப்படி இல்லாவிட்டாலும் பந்து வந்ததும் எல்லோரும் தங்களுடைய இடத்தைவிட்டுச் சென்று பந்தை நோக்கி ஓடி எதிர்அணிக்கு எளிதில் வெற்றியைத் தேடித் தந்துவிட முடியும் அல்லவா!
நம்முடைய வேலை எதுவாக இருந்தாலும், அதை உயர்ந்த நிலைக்கு உட்படுத்த விரும்பினால் வரையறுக்கப்பட்ட ஒழுங்கான திட்டத்துடன் செயலாற்ற வேண்டும்.
ஒழுங்கின்றி திட்டமின்றி செயலாற்றினால் அவசரம் ஏற்படும். குழப்பத்திலும் வேகத்திலும் நம்முடைய நேரம் வீணாகக் கழிந்துவிடும்.
அதன்பயன் நம்முடைய மேஜை, அலமாரி எல்லாம் குவியலாக இருக்கும். அதை ஒழுங்கு செய்யக்கூட நேரம் கிடைப்பது அரிதாகிவிடும்.
நேரம் அமைந்தாலும் அவற்றை எங்கு வைப்பது என்று கூடத் தெரியாமல் போய்விடும். அதை ஓரிடத்தில் வைத்தால் அப்புறம் அதனை எங்கு வைத்தோம் என்பது மறந்துவிடும்.
பின்பு அது தேவைப்படும்பொழுது கண்டபடி கலைத்துவிட்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிட நேரிடும். இறுதியில் காட்டைக் கலைத்து வேட்டையாடும் கதைபோல ஆகிவிடும்.
ஒழுங்குடன் திட்டமிட்டு செயலாற்றினால் இப்படிப்பட்ட ஒருநிலை ஏற்படாது. அவசரமும் தோன்றாது.
எப்பொழுதும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கும் சூழ்நிலையை உண்டாக்கும். அமைதியாக வேலை நடந்துகொண்டு இருக்கும்.
ஒழுங்கற்று செய்வதைவிட ஒழுங்குடன் செய்யும் வேலை நூறு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்பது உண்மை.
இன்று கணிதக்கலையில் அற்புத சாதனைகள் எல்லாம் அந்தப் பத்து எண்ணிக்கைகளை ஒரு ஒழுங்குடன் பயன்படுத்துவதில் தான் இருக்கின்றன.
நம்முடைய உடலின் உறுப்புகளும், ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுதான் வேலைசெய்கின்றன. இதனை எல்லாம் அறிந்துகொண்ட நாம் இனிமேலாவது ஒழுங்கைக் கடைபிடித்து வெற்றி பெற முடியும் அல்லவா?